மூன்றிலிருந்து முப்பது வரை

ஒரு இளைஞன் திரும்பிப் பார்க்கிறான்

ஒரு குறள் ஒரு பைசா

பதிந்தவர் மகேஷ் மேல் டிசம்பர் 2, 2008

ஒரு விடுமுறையில் என்று நினைக்கிறேன். அப்பா எங்களை திருக்குறள் படிக்கத் தூண்டினார். நாங்கள் மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பைசா தருவதாகச் சொன்னார். அதற்காக எங்கள் எல்லாருக்கும் ஒரு உண்டியல் வாங்கித் தந்தார். சிங்க முகத்தில் – நம்பர் வைத்துத் திறக்கக் கூடிய அழகான உண்டியல் அது. இன்னமும் திருநெல்வேலி வீட்டில் பத்திரமாக உள்ளது.

சரி, கதைக்கு வருவோம். அதிகாரத்திற்கு 10 பைசா தருவதாகச் சொன்ன அப்பா, அதையே அர்த்தத்துடன் படித்தால் 20 பைசாவாகத் தருவதாகச் சொன்னார். நாங்களும் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தோம். அப்பாவிடம் குறளையும் அதற்கான பொருளையும் சொல்லிவிட்டு 20 பைசா வாங்கி உண்டியலில் போட்டு விடுவோம். இப்படியே ஒரு நூறு குறள் வரை படித்தோம். அதற்கு அப்புறம் அப்படியே விட்டுப் போயிற்று. 

பிற்காலத்தில் இந்த நூறு குறள் மற்றும் பள்ளியில் படித்த குறள் இவற்றை வைத்தே வண்டி ஓட்டி விட்டேன். 

அதுவும் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கும் போது, எங்கள் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, பள்ளி prayerன் போது திருக்குறளும் அதற்கான விளக்கமும் அளிக்க வேண்டும் என்றும் கூறி மறுநாள் அதை நான் துவங்க வேண்டும் என்றும் சொன்னார். அடுத்த இரண்டு நாட்களுக்கான குறளைக் கூறி எனக்கு அடுத்து யார் சொல்ல வேண்டுமோ அவனிடமும் சொல்லச் சொன்னார். அவை இரண்டுமே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளவைதான். அதனால் வகுப்பிற்கு வந்து இன்னொரு பையனிடம் அடுத்த குறளை சொல்லி அதற்கு தயாராகுமாறு சொன்னேன். நான் அந்த குறளை மடமடவென்று சொன்னதும் எல்லாருக்கும் (ஆசிரியர் உட்பட) ஆச்சரியம். உடனே சிறு வயதில் பத்து பைசாவிற்கு திருக்குறள் படித்தது பற்றிய கதையை சொல்லி – நேயர் விருப்பத்தை முன்னிட்டு கடவுள் வாழ்த்து பத்து குறளையும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினேன்.

ஒருபுறம் அப்போது பெருமையாக இருந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் தமிழ் நாட்டில் திருக்குறள் தெரிந்திருப்பது இவ்வளவு அரிதாகப் பார்க்கப் படுவதை நினைத்தால் வேதனையாகவும் உள்ளது.

.... இங்கே பதியப்பட்டது நெல்லை | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

முன்சீப்பும் நாட்டாமை நாணுவும்

பதிந்தவர் மகேஷ் மேல் நவம்பர் 26, 2008

சிறு வயதில் கரண்ட் கட் என்றால் எங்களுக்கு எல்லாம் ஒரே குஷி. ஏனென்றால் அப்பா எங்களுக்கு எல்லாம் கதை சொல்லுவார். அதிலும் எவ்வளவு முறை கேட்டாலும் நாங்கள் திரும்பக் கேட்பது நாட்டாமை நாணு கதையும் முன்சீப்பு கதையும்.

ஒரு ஊரில் நாணு என்பவர் நாட்டாமையாக இருந்தாராம். அவர் ஒரு நாள் கொட்டகையில் நைட் ஷோ படம் பார்த்து விட்டு திரும்பி வரும்போது – இருட்டில் – கைப்பிடி சுவரில்லாத ஒரு கிணற்றில் விழுந்து விடுவார். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், கிணற்றில் விழுந்தது யார் என்று கேட்க, நம்ம ஆளு – நான் தான் நாணு என்று சொல்வார். வெளியில் இருந்தவர்கள் – நீ நீதான்னு தெரியும் – யாருன்னு ஒழுங்கா சொல்லுன்னு சொல்ல, அவர் மறுபடியும், நான் தான் நாணுன்னு சொல்லுவார். வெளியில் இருந்தவர்கள் வெறுத்து போய் மீண்டும் பெயரை கேட்க, கடைசியாக இவர் நான் தான் நாட்டாமைக்காரர் நாணு என்று சொல்வார். அப்புறம் எல்லாரும் அவரை கிணற்றிலிருந்து மீட்டார்கள் என்று கதை போகும். இப்போது கேட்கும்போது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், சிறு பிள்ளைகளாக இருந்தபோது இந்த கதை எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். 

அடுத்தது முன்சீப்பு கதை. இன்னொரு ஊரில் எல்லாரும் ஒரு ஆளை துரத்திக்கொண்டு போனார்களாம். இங்கு நின்றுகொண்டிருந்தவர், என்னவென்று விசாரித்தால் – நம்ம முன்சீப்ப வெட்டிட்டு ஒரு பயல் ஓடரான், அதுதான் துரத்தரோம்ன்னு சொன்னார்களாம். அவரும் சேர்ந்து துரத்த, கடைசியாக அவனை பிடித்து விசாரித்தால், வாழைத்தோட்டத்தில் முன்னால் உள்ள இரு வாழை சீப்பை வெட்டி விட்டானாம். அங்கு இருந்தவர்கள் முன்னால் இருந்த சீப்பு என்பதால் முன்சீப்பை வெட்டிட்டான் என்று கத்த, மக்கள் முன்சீப் என்ற பதவியில் உள்ள ஆளை வெட்டி விட்டான் என்று துரத்தினார்களாம். ஒரே காமெடிதான் போங்கள்.

.... இங்கே பதியப்பட்டது நெல்லை | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

பிள்ளையார் சுழி

பதிந்தவர் மகேஷ் மேல் நவம்பர் 23, 2008

சீதக்களப செந்தாமரைப் பூம்

பாதச் சிலம்பு பலஇசை பாட

இந்த வரிகளுடன் தொடங்கும் விநாயகர் அகவலை நான் படித்த போது எனக்கு வயது ஏழு இருக்கும். திருநெல்வேலி NGO Colony பிள்ளையார் கோவிலில் ஒரு ஸ்லோகப் போட்டி அறிவித்திருந்தார்கள். மூன்று ஸ்லோகங்கள் – விநாயகர் அகவல், சகலகலாவல்லி மாலை மற்றும் சிவபுராணம் – இவற்றை தவறின்றி பாடவேண்டும். சுமார் ஒரு மாதம் நேரம் இருந்ததால் அம்மா ஒரு எளிமையான முறையை சொல்லித் தந்தார். தினமும் காலையும் மாலையும் இந்த ஸ்லோகங்களை ஸ்வாமி படத்திற்கு முன் சொல்ல வேண்டும். மற்றபடி மனப்பாடம் என்று ஒன்றும் செய்யவில்லை. அந்த போட்டியில் வென்றது மட்டுமல்லாது இன்று வரை இந்த மூன்று ஸ்லோகங்களும் எனக்கு மறக்கவே இல்லை.

இடையில் பல ஆண்டுகள் இவற்றை சொல்லாத போதும் – சமீபத்தில் சொல்ல ஆரம்பித்து விட்டேன். இந்த மூன்று ஸ்லோகங்களும் எனது மனதிற்கு என்றுமே அருகில் இருப்பவை.

நமச்சிவாய வாழ்க 

நாதன் தாழ் வாழ்க

.... இங்கே பதியப்பட்டது நெல்லை | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »